Monday, March 2, 2009

அந்நாட்கள்...........

தேவதைகளால் சபிக்கப்பட்ட
காலத்தை எப்போதுமே
துல்லியமாய் பதிவு
செய்ய முடிவதில்லை
அந்நாட்களில்..........

கொல்லைப்புறம் ஓடும் மனக் குரங்கால்
வேட்கையான அந்த பகல்களும்
தூக்கமற்ற அந்த இரவுகளும்
எப்போதுமே நீண்ட மலைப்பாம்பை
போல் நீண்டு செல்கிறது
அந்நாட்களில்..........

மின்னல் போல்
கண் சிமிட்டி செல்லும்
புன்னகையை விட
தலையணை உறைகளில்
பதிந்து கிடக்கும்
கண்ணீரின் கறைகள் சொல்லும்
கதைகள் ஏராளம்
அந்நாட்களில்..........

கடிவாளம் இல்லா
குருட்டு குதிரையின்
நீள் பாய்ச்சலைப் போல்
இலக்குகள் அற்று
நடை போடுகிறது பாதங்கள்
அந்நாட்களில்..........

வாழ்க்கையில் விடியல் வெள்ளி
முளைக்கும் என
யோசிக்கும் போதே பிடிவாத
குழந்தையை போல்
அழுது விடுகிறது
அரை சாண் வயிறு
அந்நாட்களில்.........